அதிமுக வேட்பாளர் தேர்வு; நேர்காணலைத் தொடங்கினார் ஜெயலலிதா.
அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்தவர்களிடம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று திடீரென்று நேர்காணலை தொடங்கினார்.
மாலை 3.30 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. நேர்காணலுக்கு சென்னை மாநகராட்சி கவுன்சிலர் நூர்ஜஹான், துணை மேயர் பெஞ்சமின், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆர்.கே.நகர் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நேர்காணல் நடத்திய ஜெயலலிதா அவர்களிடம் கட்சியில் சேர்ந்த ஆண்டு, கல்வித்தகுதி, வெற்றி வாய்ப்பு
உள்ளிட்ட விபரங்களை கேட்டார். ஒவ்வொருவரிடமும் சுமார் 5 நிமிடங்கள் பேசினார்.
நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் நூர்ஜஹான், திருவல்லிக்கேணி–சேப்பாக்கம், துணை மேயர் பெஞ்சமின் மதுரவாயல், சிட்லபாக்கம் ராஜேந்திரன் தாம்பரம், மனோ ரஞ்சிதம் ஊத்தங்கரை, வெற்றிவேல் கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் பேட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்து இருந்தார்கள்.
முதல் நாளில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய 3 மதங்களை சேர்ந்தவர்களையும் அழைத்துள்ளார்.
சிவராத்திரி, அமாவாசை. இந்த இரு நாட்களுக்குள் பலரை நேர்காணலுக்கு அழைத்து வேட்பாளர் பட்டியலை தயார் செய்வார் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு அடுத்து கட்சியில் ஐவர் அணிதான் செல்வாக்கு பெற்ற அணி. இந்த அணியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகிய 5 பேரும் உள்ளனர்.
சமீப காலமாக இந்த அணிக்கு எதிராக பல்வேறு புகார்கள் எழுந்தன. அது பற்றி கேள்விப்பட்ட ஜெயலலிதா கடும் கோபம் அடைந்தார். ஐவர் அணியின் ஆதரவு பெற்ற நிர்வாகிகள் பலரை தூக்கி எறிந்தார்.
நேற்று நடந்த நேர்காணலிலும் இந்த அணி அமைச்சர்கள் அனைவரையும் ஓரம் கட்டினார். அவைத் தலைவர் மதுசூதனன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஸ்டின் செல்வ ராஜ் ஆகியோரை மட்டும் இடம் பெற செய்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.