பா.ஜனதா தலைவர் அமித்ஷா மீது மாயாவதி கடும் தாக்கு
உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் 2 பேர் சமீபத்தில் விலகினர்.
இது அந்த கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த விலகல் சம்பவங்கள் தொடர்பாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா பகுஜன் சமாஜ் கட்சியை குறை கூறியிருந்தார். ‘பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து இவ்வாறு தலைவர்கள் விலகிக்கொண்டே போனால், தேர்தல் நேரத்தில் கட்சித்தலைவர் மாயாவதி மட்டுமே இருப்பார்’ என கூறியிருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்து மாயாவதிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் வளர்ச்சி பா.ஜனதாவுக்கு மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த கட்சித்தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுப்பதில்லை.
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் அரசு குற்றங்களை கட்டுப்படுத்த தவறிவிட்டது. போலீசார் கூட தங்கள் உயிரை விட வேண்டியிருக்கிறது. மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்படும் என கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பா.ஜனதா வாக்குறுதி கொடுத்தது. ஆனால் தற்போது என்ன ஆயிற்று? சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் கடமை என்று அமித்ஷா கூறி வருகிறார்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தனது அரசியல்சாசன கடமையை நிறைவேற்ற மத்திய பா.ஜனதா அரசு தவறிவிட்டது.
சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது மட்டுமின்றி பொறுப்பற்றதும் ஆகும்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.