ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் வழக்கறிஞர் வாதங்கள் நிறைவு பெற்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
இதுவரை மொத்தம் 23 நாட்கள் இந்த விசாரணை நடந்து உள்ளது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, கர்நாடக அரசு வக்கீல் பி.பி.ஆச்சார்யா, பேராசிரியர் க.அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் அந்தியார்ஜூனா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல் எல்.நாகேஸ்வரராவ் (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்), மூத்த வக்கீல் சேகர் நாப்டே ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை ஏற்கனவே நிறைவு செய்து உள்ளனர்.
ஜெயலலிதா தரப்பு வாதங்கள் மீதான எதிர்வாதத்தை மீண்டும் கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா முன்வைத்து வந்தார்.
கடந்த மாதம் 12-ந்தேதியன்று விசாரணை முடிந்ததும், சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து நீதிபதிகள் விசாரணையை ஜூன் 1-ந்தேதியன்று ஒத்திவைத்தனர்.
அதன்படி இவ்வழக்கின் இறுதி வாதம் இன்று நடைபெற்றது. மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டி இருந்த நிலையில், அவர் தன்னுடைய வாதங்களை எழுத்து வடிவில் இன்று தாக்கல் செய்தார்.
இத்துடன் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதங்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடைந்துள்ளது. வரும் செவ்வாய்க்கிழமைக்கு பிறகு தீர்ப்பு எப்போது என்று தெரியவரும்.
அதேசமயம், சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புள்ள நிறுவனங்கள் தங்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.