பா.ஜ.க. எம்.பி. தொடர்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது, தெற்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி.யான ரமேஷ் பிந்தூரி டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, என் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தவறான தகவலை கூறியுள்ளார். ஆனால் என் மீது எந்த வழக்கும் இல்லை. எனவே அவதூறான தவறான தகவலை கூறிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிந்தூரி கூறியிருந்தார்.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்ற நீதிபதி, விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அதன்படி இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார். மேலும் அவர் சார்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.