சாட்சியை கொன்ற வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் உதவியாளர் கைது
சாமியார் ஆசாராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கின் முக்கிய சாட்சியை கொலை செய்த வழக்கில் சாமியாரின் நெருங்கிய உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை பலாத்காரம் செய்ததாக சாமியார் ஆசாராம் பாபு கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக அவரது ஆசிரம சமையல்காரரும் நெருங்கிய உதவியாளருமான அகில் குப்தா (35) சேர்க்கப்பட்டிருந்தார். இவர் ஆசாராம் பாபுவுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சியம் அளித்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசாராமின் அடியாளாக கருதப்படும் கார்த்திக் ஹல்தாரை கைது செய்தனர். இவர்தான், அகில் குப்தாவை கொன்றதாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இக்கொலையில் ஆசாராம் பாபுவின் நெருங்கிய உதவியாளரான நீரஜ் குமார் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் மிரக்பூர் கிராமத்தில் நீரஜ் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆசாராமின் நந்த்கான் ஆசிரம பொறுப்பாளரான அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் பல போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.