டெல்லி மேல்-சபை தேர்தலில் ஹரியானாவில் முறைகேடு: தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய காங்கிரஸ் முடிவு
டெல்லி மேல்-சபைக்கு 27 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் பல்வேறு மாநிலங்களில் நடந்தது. இதில் அரியானா மாநிலத்தில் 2 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி வீரேந்திர சிங்கும், அக்கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திராவும் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு சுயேச்சை வேட்பாளரான ஆர்.கே.ஆனந்துக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது. அதன்படி அக்கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களும் ஆர்.கே.ஆனந்துக்கு வாக்களித்தனர். ஆனால் இந்த 14 பேரின் வாக்குகளும் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனால் ஆர்.கே.ஆனந்த் தோல்வி அடைந்தார்.இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படும் பேனாவை மாற்றி வைத்து வேண்டுமென்றே முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால்தான் காங்கிரசாரின் ஓட்டுகள் செல்லாதவையாக மாறியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பி.கே.ஹரிபிரசாத் கூறியுள்ளார்.தேர்தலில் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தியதை கண்டித்து தேர்தல் கமிஷனிடம் இன்று (திங்கட்கிழமை) புகார் செய்ய உள்ளதாக கூறிய அவர், இதில் உட்கட்சி சதி எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்த வாக்குப்பதிவில் மிகப்பெரும் சதி அடங்கியிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி பி.எஸ்.ஹூடாவும் புகார் கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தை தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.