52 வயது டென்மார்க் பெண் கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை; டெல்லி கோர்ட் தீர்ப்பு.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த 52 வயது பெண்ணை டெல்லியில் கத்தி முனையில் மிரட்டி கற்பழித்த வழக்கில் ஐந்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக டெல்லி வந்தார்.
ஜனவரி 14-ந்தேதி இரவு அவர் ரெயில் நிலையம் அருகே உள்ள டிவிசன் ரெயில்வே ஆபிசர்ஸ் அறை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 9 பேர் கொண்ட கும்பல் டென்மார்க் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கடத்தி சென்று கற்பழித்தது. மேலும் அவரிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
டெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். இதில் 3 பேர் சிறார் என்பதால் அவர்கள் விசாரணை சிறார் நீதிமன்ற வாரியத்துக்கு மாற்றப்பட்டது.
டெல்லி திஸ்ஹசாரி கோர்ட்டில் இந்த கற்பழிப்பு வழக்கு விசாரணை நடந்தது. 27 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே குற்றம் சாட்டப்பட்ட ஷியாம் லால் கடந்த பிப்ரவரி மாதம் இறந்தார்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மகேந்திரா என்கிற கஞ்சா (27), முகமது ராஜா (23), ராஜூ(24), அர்ஜூன் (22), ராஜி சக்கா (23) ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் ஆனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.