இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்: தினகரனுக்கு 3 நாள் அவகாசம் அளிக்க டெல்லி போலீஸ் மறுப்பு
அ.தி.மு.க 2 அணிகளாக பிளவுபட்டதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க.வின் இரு அணியினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
இந்த நிலையில் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ரூ 1 கோடியே 30 லட்சம் பணத்துடன் பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தரவேண்டும் என்று கூறி டி.டி.வி தினகரன் தன்னிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக தெரிவித்தார்.
இதையடுத்து சுகேஷ் சந்திராவை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லி போலீசார் சென்னை பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி. தினகரன் இல்லத்துக்கு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் டி.டி.வி. தினகரனிடம் சம்மன் வழங்கினார்கள். நாளை (சனிக்கிழமை) டெல்லி போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டிருந்தது.
விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஜராக தயாராக இருப்பதாக போலீசாரிடம் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் டி.டி.வி தினகரன் போலீசில் ஆஜராக 3 நாள் அவகாசம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனுக்கு அவகாசம் கொடுக்க மறுத்து விட்டனர். நாளை (சனிக்கிழமை) டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
முதன்முறையாக சம்மன் வழங்கப்பட்டுள்ளதால் நேரில் ஆஜர் ஆகலாமா? அல்லது வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளிக்கலாமா என்று டி.டி.வி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் நேரில் ஆஜர் ஆகிறாரா? அல்லது வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளிக்கிறாரா? என்பது நாளை தான் தெரியும்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.