இந்திய விமான நிலையங்களில் வரி இல்லா பொருட்கள் வாங்கும் உச்சவரம்பு 5 மடங்கு உயர்வு
இந்தியா முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வரி இல்லாமல் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் அல்லது செல்லும் பயணிகள் இந்த கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
ஆனால் இந்த கடைகளில் இருந்து அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்துக்கு மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருந்த பயணிகள், இந்த உச்சவரம்பை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த உச்சவரம்பு 5 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி இனிமேல் பயணிகள் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கலாம் என மத்திய சுங்க மற்றும் கலால் வாரியம் அறிவித்து உள்ளது. அத்துடன் வரி இல்லா பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சில உத்தரவுகளும் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, வரியில்லா பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், பொருட்களின் விலைகள் இந்திய ரூபாயின் மதிப்பில் எழுதி வைத்திருக்க வேண்டும், ஏற்றுமதி அல்லது இறக்குமதி பொருட்களுக்காக வெளிநாட்டு பணத்தை மாற்றும் போது, அதற்கான பரிமாற்றத்தொகையாக வங்கி அல்லது மத்திய சுங்க மற்றும் கலால் வாரியம் விதித்துள்ள தொகையை 15 நாள் அடிப்படையில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.