570 கோடி கண்டெய்னர் விவகாரம்; திமுக கொடுத்த புகாரின் பேரில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- சிபிஐக்கு ஐகோர்ட் கேள்வி.
சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. செய்தித் தொடர்புதுறை செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, கடந்த மே மாதம் 13-ந்தேதி திருப்பூரிலண் 3 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த லாரிகளில் ரூ.570 கோடி இருந்தது. இந்த பணத்தை கொண்டு வந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளின் பதிவு எண்களும் போலியானது என்று தெரிய வந்துள்ளது. இந்த பணம் யாருக்காக, எங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது? என்பது குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பின்னர், சட்டத்துக்கு புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட இந்த பணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என்று கடந்த மே 30-ந்தேதி சி.பி.ஐ. இயக்குனர், இணை இயக்குனர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பதில் மர்மம் நீடித்துக் கொண்டே வருகிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால், இந்த மர்மம் விலகும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் கடந்த மே 30-ந்தேதி கொடுத்த புகார் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அந்த புகாரின் நிலை என்ன? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.