சஞ்சய் தத் விடுதலையானது எப்படி? விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகத்திற்கு பேரறிவாளன் கடிதம்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பேரறிவாளன் கேள்வி எழுப்பி மேல்முறையீடு செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பேரறிவாளன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்தது. ஆனால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால், மத்திய அரசின் கருத்தை கேட்டு தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு கடிதம் அனுப்பியது.
இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பொது தகவல் அதிகாரிக்கு, பேரறிவாளன் 4 கேள்விகள் கேட்டு கடந்த ஜனவரி மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில், ‘இதுவரை மத்திய அரசு எத்தனை தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது? மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை சி.பி.ஐ.தான் விசாரித்தது. இதில் ஆயுதம் வைத்து இருந்ததாக நடிகர் சஞ்சய்தத் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை மராட்டிய மாநில அரசு குறைத்து, அவரை விடுதலை செய்துள்ளது. சஞ்சய்தத் எந்த சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை பேரறிவாளன் கேட்டிருந்தார்.
ஆனால், இந்த கேள்விகளுக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, மத்திய உள்துறை இணை செயலரிடம் மேல்முறையீடு செய்து கடந்த 6-ந்தேதி கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் மூலமாக பேரறிவாளன் அனுப்பி வைத்துள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.