‘‘படங்கள் தோல்வி அடைந்தால் நான் துவண்டு போகிறேன்’’ என்று நடிகை தமன்னா கூறினார்.
நடிகை தமன்னா மும்பையில் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:–
‘‘நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்து வந்த ஹேப்பி டேஸ் வெற்றிகரமாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. பாகுபலி படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை திரும்பி பார்த்தனர். இவ்வளவு உயரத்துக்கு வந்த நான் சிறு வயதில் இருந்து பயணப்பட்டு வந்த தூரங்களை நினைவுபடுத்தி பார்க்கும் போது வியந்து போகிறேன்.
எனது தந்தை கப்பலில் வேலை செய்ததால் அதிக நாட்களை கடலிலேயே கழித்தார். அதன்பிறகு அந்த வேலையை விட்டு விட்டு நகை வியாபாரத்தில் இறங்கினார். அம்மாவும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து நான் பிறந்ததும் எனக்காக வேலையை விட்டுவிட்டார். அவருடைய தியாகம் எப்போதும் என் மனதில் இருக்கிறது. பள்ளியில் படித்தபோது நாடகமொன்றில் நடித்தேன். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நாடக குழுவில் சேர்ந்தேன்.
நடிப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து யோகா கற்க ஆரம்பித்தேன். நான் படித்த பள்ளிக்கு நடிகை ராணிமுகர்ஜி உள்பட நிறைய திரையுலக பிரபலங்கள் வந்தனர். அவர்களை பார்த்து நடிப்பில் எனக்கு மேலும் தீவிரமான பற்று ஏற்பட்டது. எனது அம்மாவும் நீ ஒரு நாள் மிஸ் இந்தியா ஆவாய் என்று பேசி வந்தார். தொடர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்தேன். நடனமும் கற்றேன். அதன்பிறகு முழு நேர நடிகையாகி விட்டேன்.
தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். சினிமாவில் வெற்றி–தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் சொல்வதை கேட்டு இருக்கிறேன். அது யாராலும் முடியாது. வெற்றியில் சந்தோஷப்படுவதும் தோல்வியில் கவலைப்படுவதும் மனிதர்களுக்கு உள்ள இயற்கையான குணம். நான் நடித்த படம் தோல்வி அடைந்தால் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும். எனது படங்கள் தோல்வி அடையும் போதெல்லாம் நான் துவண்டுபோகிறேன்.
கஷ்டப்பட்டு நடித்தும் சரியாக போகவில்லையே என்ற வேதனை இருக்கும். வெற்றி வரும்போது பலருக்கு கர்வம் ஏற்படும் ஆனால் அனுபவம் வரவர அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.’’
இவ்வாறு தமன்னா கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.