தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டி – சரத்குமார் அறிவிப்பு.
சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடனான கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. ஆகவே அந்தக் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறதோ அந்தத் தொகுதிகள் கிடைப்பதில் அந்தக் கட்சிக்கு சிக்கல் எதுவும் இல்லை. திமுக அஇஅதிமுக போன்ற கட்சிகள் என்றால்தான் அவர்கள் ஒதுக்கும் தொகுதியைப் பார்த்துக்கொண்டுதான் கருத்துத் தெரிவிக்க முடியும். பாஜக கூட்டணி என்பதனால் சரத்குமார் தான் மீண்டும் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் தென்காசித் தொகுதியிலேயே மறுபடியும் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசும்போது “ சமத்துவ மக்கள் கட்சியில் சாதி சமய வேறுபாடு கிடையாது. இந்த இயக்கம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. 1967ல் இருந்து திமுக அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. மக்கள் தற்போது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சிக்கென்று தனி சின்னம் வேண்டும். கட்சியின் கொள்கைகளை வீடுவீடாக பிரசாரம் செய்ய வேண்டும். இங்கு இளைஞர்கள் அதிகமாக வந்துள்ளனர். இது ஒரு குடும்பம் போன்றது.
கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் என்னை சந்தித்துப் பேசினார்கள். நான் தென்காசி தொகுதியில் நிறைய திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். எனவே மீண்டும் நான் தென்காசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்”
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.