இரண்டாவது போட்டியிலும் ஜிம்பாப்வேயை வென்றது இந்தியா. இதன் மூலம் சீரிசையும் வென்றது.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளும் மோதிய 2–வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய ஜிம்பாப்வே அணி தட்டுத்தடுமாறி 23.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதனால், 34.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 126 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஷிபாண்டா 53 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய அணி தரப்பில் சாகல் 3 விக்கெட்டுக்களை சாய்த்தார். பரிந்தர் ஸ்ரன் மற்றும் குல்கர்னி தலா இரண்டு விக்கெட்டுக்களை எடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. துவக்க வீரர்கள் லோகேஷ் ராகுல் 33 ரன்களும், கருண் நாயர் 39 ரன்களும் எடுத்து சிறப்பான அடித்தளம் அமைக்க, அடுத்து வந்த ராயுடு ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 139 பந்துகள் மீதமிருந்த நிலையில், 129 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாகல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இதே ஹராரே மைதானத்தில் நாளை மறுநாள் (ஜூன் 15) நடைபெற உள்ளது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.