ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் டிடிவி தினகரன் சார்பில் பென் டிரைவ் சமர்ப்பிப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனில், தினமும் ஏராளமானோர் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகிறார்கள். தங்களிடம் உள்ள ஆவணங்களையும் தாக்கல் செய்து வருகிறார்கள்.
சசிகலா உறவினரும், இளவரசியின் மகளுமான கிருஷ்ண பிரியா இன்று காலை சேப்பாக்கத்தில் உள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பற்றி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் சார்பில் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இன்று ஆஜராகி ஒரு பென் டிரைவை வழங்கி விளக்கம் அளித்தார். அதில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான தகவல்கள் இருக்கலாம் என தெரிகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பென் டிரைவ் ஆதாரம், விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.