அமைச்சர்களின் இணையதள முகவரிகள் மூடப்பட்டதால் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் புதிய உத்தரவு; ‘ஆதாரங்களை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்புங்கள்’.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஆதாரம் இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது என்று கண்டித்து வரும் அமைச்சர்களுக்கு பதில் அளித்த கமல்ஹாசன், “ஊழல் என்ற சத்தம் ஊரெல்லாம் கேட்கிறது. இதில் அமைச்சர்களுக்கு ஆதாரம் வேண்டுமாம். அமைச்சர்கள் கேட்ட ஆதாரங்களையும் ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.
அமைச்சர்களை இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளும் முகவரியையும் அதில் வெளியிட்டார். கமல்ஹாசன் வெளியிட்ட முகவரி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும். அந்த முகவரிக்கு ஊழல் புகார் ஆதாரங்களை அனுப்பி வைக்க ரசிகர்கள் தயாரானபோது முகவரி பற்றிய விவரங்கள் அனைத்தும் திடீரென மாயமாகி இருந்தன.
அமைச்சர்களின் தொடர்பு எண்கள், இமெயில் முகவரி, அவர்களின் சொந்த ஊர் பற்றிய முகவரி விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் போன்றவை எதுவும் இல்லாமல் வெற்றிடமாக இருந்தது.
இதனால் ரசிகர்கள் ஊழல் ஆதாரங்களை அனுப்ப முடியாமல் குழம்பினார்கள். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நேற்று ரசிகர்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்தார்.
அமைச்சர்களின் முகவரிக்கு பதிலாக ஊழல் புகார் ஆதாரங்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வையுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.
அத்துடன் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகம் இயங்கும் எண்.293, எம்.கே.என்.ரோடு, ஆலந்தூர், சென்னை-600016 என்ற முகவரியையும் 22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்கள், 22321005 என்ற பேக்ஸ் எண், dv-ac@nic.in என்ற இமெயில் முகவரி ஆகியவற்றையும் அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினருக்கும் அனுப்பி வைத்து உள்ளார்.
இந்த முகவரிக்கு ரசிகர்கள் ஊழல் புகார் ஆதாரங்களை அனுப்பி வருகிறார்கள்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.