அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்ய மீண்டும் தடை: ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாகவும், இதனால் விவசாயம் அழிந்து வருவதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், ‘அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பத்திர பதிவு செய்யக் கூடாது என்றும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய ஒரு திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி, அதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும், கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி உத்தரவிட்டனர்.
இதையடுத்து பத்திரப்பதிவு சட்டத்தில், பிரிவு 22 ஏ-வில் கொண்டுவந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஒரு அரசாணையை கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி தமிழக அரசு பிறப்பித்தது. அதில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்ய தடை விதிப்பதாகவும், ஏற்கனவே பத்திர பதிவு (விற்பனை) செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறுபத்திர பதிவு (மறுவிற்பனை) செய்யலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த அரசாணையை ஐகோர்ட்டு ஏற்கவில்லை. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்ய திட்டத்தை உருவாக்கி, அதுகுறித்து தமிழக அரசு கொள்கை முடிவினை எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்பின்னர் பல முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரையறை செய்வதற்கு தமிழக அரசு காலஅவகாசம் கேட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த மார்ச் 28-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர், அக்டோபர் 20-ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்றுக்கொள்வதாகவும், இந்த அரசாணையின்படி ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும், விவசாய நிலத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை புதிதாக உருவாக்கியவர்கள், தமிழக அரசு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை காத்திருக்கவேண்டும் என்றும், இந்த உத்தரவின்படி செய்யப்படும் பத்திரப்பதிவு, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் உத்தரவிட்டனர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.