உள்ளாட்சி தேர்தல் சட்டத்திருத்தங்களை எதிர்த்து பா.ம.க. வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.தமிழரசு. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகின்றன. இந்த தேர்தலின்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், எஸ்.சி., எஸ்.டி. பெண்கள் ஆகியோருக்கு, மேயர், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் மற்றும் வார்டுகள் சுழற்சி முறையில் ஒதுக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி, வார்டுகளை மறுவரை செய்யப்படும்.
கடந்த 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. இதன்பின்னர், 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போதும், இதே ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு எடுப்பு வெளியாகி உள்ளது.
எனவே, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பெண்கள் ஆகியோருக்கு பதவிகள், வார்டுகள் ஒதுக்கீடு செய்யவேண்டும். ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், எதிர்பார்த்த அளவுக்கு ஆளும் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதனால், 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்த வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை, 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி நடத்துவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கடந்த ஜூன் மாதம் இரு சட்டத்திருத்தங்களையும் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
எனவே, இந்த சட்டத்திருத்தங்கள் சட்டவிரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்கவேண்டும். அந்த சட்டத்திருத்தங்களை ரத்து செய்யவேண்டும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பெண்களுக்கு சுழற்சி அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகள், வார்டுகள் ஒதுக்கவேண்டும் என்று உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர், ‘இதே கோரிக்கையுடன் ஏற்கனவே (தி.மு.க.) தாக்கல் செய்த மனு வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கோடு, இந்த வழக்கும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதேநேரம், இந்த வழக்கிற்கு தமிழக சட்டத்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் பதில் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.
-Amudhavan.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.