தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. கருணாநிதி, ஸ்டாலின், ரஜினி வாக்களித்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் தொகுதியில் உள்ள சாரதா நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் திமுக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேவையான அளவிற்கு வெற்றி பெறும் என்று கூறினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
வாக்களிப்பதற்காக அவர் நீண்ட நேரம் வரிசையில் நின்றார்.
ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகள் ஆகியோர் உடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றார். மேலும் அதிமுக-வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமம் தொகுதியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தல் ஆணையம் மீது சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.
அதேபோல், ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களிக்க அவர் தனியாக தான் வந்தார். நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் தொகுதியில் தனது குடும்பத்துடன் வந்து காலையிலே வாக்களித்தார்.
தேர்தலில் வாக்களித்த குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் “அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தமிழ்நாடு முழுவதும் எக்கச்சக்க பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள். இதனை தேர்தல் கமிஷனும் தடுக்கவில்லை” என்று கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.