ராகுல்காந்தி மோடிக்கு இணையானவர் அல்ல: சரத்பவார் கருத்து
மத்திய மந்திரி நிதின் கட்காரி தனது பிறந்த நாளை நாக்பூரில் கொண்டாடினார். இதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் பொது வேட்பாளரை பாரதீய ஜனதா நிறுத்த வேண்டும்.
பொது வேட்பாளராக என்னை நிறுத்துவது சம்பந்தமாக பேசுவது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. என்னை பொறுத்த வரை ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட விரும்ப வில்லை.
இன்றைய சூழ்நிலையில எதிர்க்கட்சிகள் மக்களின் நம்பிக்கையை பெற தவறி விட்டன. இதனால்தான் பாரதீய ஜனதா கட்சி சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றம் உள்ளது.
மக்கள் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதை எதிர்கட்சிகளால் கொடுக்க முடியுமா? என்று தெரியவில்லை. காங்கிரஸ் முன்னிறுத்தக்கூடிய நபர் (ராகுல்காந்தி) மோடிக்கு இணையானவர் இல்லை.
அதே நேரத்தில் மோடிதான் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. எனவே, அவர் மீது மக்களுக்கு கோபம் ஏற்பட தொடங்கி உள்ளது. இது, போகப் போக அதிகரிக்கலாம்.
காஷ்மீரில் நடக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து இருப்பது சரியானது அல்ல. இது, பல்வேறு வகையான சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன் விவசாயிகளையும் பாதிக்க செய்யும்.
இவ்வாறு சரத்பவார் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.