மோடியின் தியாகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு ; 4 கோடிக்கு ஏலம் போன சூட்டைப் பற்றி ராகுல் கிண்டல்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி, தங்க நிறத்தில் தனது பெயர் பொறிக்கப்பட்ட நீலநிற ‘சூட்’ ஒன்றை அணிந்திருந்தார்.
இந்த விலையுயர்ந்த ‘சூட்’ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. 3 நாட்கள் நடந்த இந்த ஏலத்தில், குஜராத்தின் சூரத் நகரை பூர்வீகமாக கொண்ட வைர வியாபாரியும், தொழில் அதிபருமான லால்ஜிபாய் படேல் என்பவர், பிரதமரின் சூட்டை ரூ.4.31 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார்.
மிக அதிக விலைக்கு ஏலம் போனதன் மூலம் பிரதமரின் ‘சூட்’ தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதை அங்கீகரித்துள்ள கின்னஸ் நிறுவனம், ‘மிக அதிக விலைக்கு ஏலம் போன ’சூட்’ (ஆடை)’ என சான்று அளித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘இந்த கின்னஸ் சாதனை மோடியின் மிகப்பெரிய தியாகத்திற்கு கிடைத்த வெகுமதி’’ என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, மோடி அரசு வசதிப் படைத்தவர்களுக்கான அரசு என்று குற்றம்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.