ஆயுத வியாபாரியுடன் ராபர்ட் வதேராவைத் தொடர்பு படுத்துவது அரசியல் சதி; விசாரணைக்குத் தயார் – சோனியா காந்தி அறிவிப்பு.
ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரி என்பவருக்கும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்ததாகவும், அவர்களிடையே பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
சஞ்சய் பண்டாரி ‘‘ஆப்செட் இண்டியா சொலுசன்ஸ்’’ (ஒ.ஐ.எஸ்) என்ற பெயரில் ஆயுதத் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
ராபர்ட் வதேரா பினாமி பெயரில் லண்டனில் சஞ்சய் பண்டாரி மூலம் ரூ.19 கோடி மதிப்புள்ள பங்களாவை 2009-ம் ஆண்டு வாங்கி இருப்பதாகவும், பின்பு அந்த பங்களாவை ராபர்ட் வதேரா 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆயுத வியாபாரியுடன் ராபர்ட் வதேராவிற்கு தொடர்பு என்று கூறுவது அரசியல் சதி தான் என்றும் ஆதாரம் இருந்தால் விசாரணைக்கு உத்தரவிடட்டும் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுக்களை தினந்தோறும் அவர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் விசாரணை நடத்தட்டும். அப்போது உண்மை வெளிவரும்” என்று கூறினார்.
முன்னதாக, லண்டனில் பங்களா வாங்கவில்லை என்றும், சஞ்சய் பண்டாரியுடன் தனது நிறுவனம் எந்த தொழில் உறவும் வைத்திருக்கவில்லை என்றும் வதேரா விளக்கம் அளித்துள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.