‘‘சம்பளம் முக்கியம் அல்ல. நல்ல படங்களை கொடுக்கும் பொறுப்பு நடிகர்–நடிகைகளுக்கு இருக்கிறது’’ -நடிகை அனுஷ்கா.
இதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:–
‘‘ஒரு நடிகை 100 படங்களில் நடித்து, பலகோடி சம்பாதித்து, அதிகமான ஆண்டுகள் கதாநாயகியாக நீடித்து இருப்பது என்பதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. அவர் சினிமா துறையில் இருந்த காலத்தில் எத்தனை சினேகிதிகள், நண்பர்களை சம்பாதித்தார் என்பதுதான் முக்கியம். பணத்தை சம்பாதிப்பதை விட, மனிதர்களை சம்பாதிப்பதுதான் சிறந்தது.
ஏதோ நடிகையானோம், நடித்து விட்டுப்போனோம் என்றெல்லாம் நான் இருக்க மாட்டேன். சினிமா துறையில் நானும் ஒரு பங்காக இருக்கிறேன் என்பதையும் அந்த துறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கும் இருக்கிறது என்பதையும் உணர்ந்து இருக்கிறேன். சம்பளம் எனக்கு முக்கியம் அல்ல. நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் இருக்கிறது. படங்களில் கஷ்டப்பட்டு நடிப்பதும், தியாகங்கள் செய்வதும் வீண் போவது இல்லை.
சில படங்களில் எனது ‘கால்ஷீட்’ முடிந்த பிறகும் கூடுதலாக சில நாட்கள் நடித்து கொடுக்கும்படி கேட்பார்கள். நான் மறுப்பு சொல்லாமல் நடிப்பேன். முதலில் எடுத்த காட்சிகளில் திருப்தி இல்லை என்றும் எனவே மீண்டும் காட்சிகளை மாற்றி எடுப்பதற்கு கால்ஷீட் தரவேண்டும் என்றும் சில இயக்குனர்கள் கேட்பார்கள். அதிலும் மறுப்பு சொல்லாமல் நடிப்பேன். படத்தை சிறப்பாக எடுத்து ரசிகர்களிடம் சேர்க்கும் பொறுப்பு டைரக்டருக்கு மட்டும் இல்லை. அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் இருக்கிறது.
கஷ்டப்பட்டு எடுக்கும் படங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஒருவேளை தோற்றாலும் நன்றாக வேலை செய்தோம் என்ற ஆத்ம திருப்தி இருக்கும். கடுமையாக உழைத்தால் நிச்சயம் நல்ல படம் கொடுக்க முடியும்.’’
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.