சசிகலா புஷ்பாவை ஆகஸ்ட் 22ம் தேதிவரை கைது செய்வதற்கு டெல்லி ஐகோர்ட் தடை.
டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பவர் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க. எம்.பி. சிவாவை தாக்கிய விவகாரத்தில் இவர் அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.
இதற்கிடையே சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் மீது தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாலியல் புகார் அளிக்கப்பட்டது. அவரது வீட்டில் வேலை பார்த்த பானுமதி என்பவர் புகார் கொடுத்து இருந்தார்.
இதையடுத்து சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி முத்தா குப்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத் ஏற்கனவே கடந்த 8-ந்தேதி சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீதான வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்துள்ளது. எனவே இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்றார்.
இதற்கு சசிகலா புஷ்பா தரப்பு வக்கீல் சுதிர் நந்தா ஜோக் தன்னுடைய வாதத்தில் தற்போது தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு புதிய புகார் மீதானது. எனவே சசிகலா புஷ்பா குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார். அதன்படி இந்த மனு மீதான விசாரணை இன்றும் நடந்தது. அப்போது சசிகலா புஷ்பா மீதான காவல்துறை நடவடிக்கைக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது. வருகிற 22-ந்தேதி வரை சசிகலா புஷ்பா மீது கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுக வேண்டும் என்றும் சசிகலா புஷ்பாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.