சொத்து குவிப்பு வழக்கு: ஆச்சார்யாவின் சுயசரிதை தகவல்களை விசாரிக்க கோரிய மனு ஒத்திவைப்பு – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பி.வி.ஆச்சார்யா தன்னுடைய சுயசரிதையில் கூறிய சில பரபரப்பு தகவல்கள் பற்றி புலன் விசாரணை நடத்தக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கர்நாடக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரலும், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக ஆஜரானவருமான பி.வி.ஆச்சார்யா தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஆல் புரம் மெமரி’ (அத்தனையும் நினைவில் இருந்து) என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.
அந்த சுயசரிதையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு குறித்து சுமார் 14 பக்கங்களும், 30-க்கும் மேற்பட்ட பின் இணைப்புகளும் உள்ளன. அவற்றில் இந்த வழக்கு தொடர்பாக பி.வி.ஆச்சார்யா பல பரபரப்பு தகவல்களை அளித்து உள்ளார். குறிப்பாக வழக்கு நடைபெற்ற போது தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், தனக்கு பலவகையிலும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்ததாகவும் எழுதியிருந்தார்.
இதைத்தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக வக்கீல் பி.வி.ஆச்சார்யா தன்னுடைய நூலில் விவரித்துள்ள பரபரப்பு தகவல்கள் குறித்து உரிய புலனாய்வு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பி.ரத்தினம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பி.ரத்தினம் சார்பில் மேலும் 8 வார அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு 4 வார கால அவகாசம் அளித்ததுடன், வழக்கின் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.