என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜுக்கு சென்னை ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ் தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த ஐகோர்ட்டு அவருக்கு கடந்த மே மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
யுவராஜுக்கு சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 29-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.
அவர்கள் தங்கள் வாதத்தில் ‘ஐகோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ள படி மாறியுள்ள சந்தர்ப்ப சூழ்நிலை என்ற வார்த்தையை அடிப்படையாக கொண்டு அவருக்கு ஜாமீன் அளித்து இருப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் கிடையாது. தீரன் சின்னமலை பேரவை மூலம் இவர் செல்வாக்கை வளர்த்து உள்ளார். இவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படும் பட்சத்தில் வெளியில் இருந்து சாட்சியங்களை கலைக்க வாய்ப்புக்கள் உள்ளன. எனவே அவருக்கு சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டனர்.
தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவின் மீது இரு வாரங்களில் பதிலளிக்குமாறு யுவராஜுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.