காஞ்சீபுரத்தில் இருந்து சென்று நேபாள நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு
காஞ்சீபுரத்தில் இருந்து சென்று நேபாள நிலச்சரிவில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும், அவர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என்றும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த கோபி (வயது 40) என்பவர் தலைமையில், காஞ்சீபுரத்தில் இருந்து கடந்த 20-ந்தேதி 17 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர். கடந்த 24-ந்தேதி முக்திநாத் மலைப்பகுதியில் உள்ள சிவன் கோவிலை சாமி தரிசனம் செய்த அவர்கள், இந்தியா திரும்ப திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் அதற்குள் நேபாளத்தில் திடீரென கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. 7 பேர் மட்டும் நிலச்சரிவிற்கு முன்பே இந்திய எல்லைக்குள் வந்துவிட்டனர்.
ஒருங்கிணைப்பாளர் கோபி, சங்கரி உள்ளிட்ட 10 பேர் நிலச்சரிவு பகுதியில் சிக்கி கொண்டனர். அங்கிருந்து வரமுடியாமல் அவர்கள் தவித்து வந்தனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:-
நேபாள நிலச்சரிவில் சிக்கித்தவித்த தமிழர்கள் 10 பேரும் நேற்று முன்தினம் நேபாள அரசால் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் நேபாளத்தில் உள்ள சொக்காரா என்ற இடத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மோசமான வானிலை காரண மாக நேபாளத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. விமான சேவை தொடங்கியதும் மீட்கப்பட்டவர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.