உத்தராகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்திடம் சிபிஐ விசாரணை.
உத்தாரகண்டில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக குதிரை பேரம் நடந்தது தொடர்பான புகார் குறித்து முதல்வர் ஹரிஷ் ராவத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
உத்தராகண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் கடந்த மார்ச் மாதம் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டார். இதையடுத்து, தனக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஹரிஷ் ராவத் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஒரு வீடியோ (ஸ்டிங் ஆபரேஷன்) பதிவும் வெளியானது.
இதனிடையே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது, இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 29-ம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன்பேரில் மே 9-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராவத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார்.
இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் ராவத் வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 15-ம் தேதி அமைச்சரவை கூடி, ஸ்டிங் ஆபரேஷன் குறித்து விசாரணை நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்தது. மேலும், மாநில விவகாரம் என்பதால் இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்பது என்றும் முடிவு செய்தது.
இந்நிலையில், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வகை செய்யும் மாநில அரசின் அறிவிக்கையை ஏற்க சிபிஐ மறுத்துவிட்டது. சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ராவத்தின் கோரிக்கையை உத்தாரகண்ட் உயர் நீதிமன்றமும் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, 24-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராவத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி, நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ராவத் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.