மருது’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கவிருக்கும் படத்தில் நடித்து, தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால்.
முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மருது’. இமான் இசையமைத்து வரும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் விஷால். ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது அப்படம் கைவிடப்பட்டது.
இதனால், விஷால் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், விஷால் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடித்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
மிஷ்கின் நடித்து, தயாரித்து வரும் ‘சவரக்கத்தி’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. அப்படத்தை முடித்துவிட்டு மிஷ்கின், விஷால் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது. ‘சவரக்கத்தி’ படத்தை அவருடைய உதவி இயக்குநர் ஆதித்யா இயக்கி வருகிறார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.