‘சூர்யா இந்த அளவுக்கு உயர்வார் என்று நாங்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை’- நடிகர் சிவகுமார் உணர்ச்சிகரப் பேச்சு.
சூர்யாவின் ‘24’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல் குறுந்தகட்டை சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது;
அக்னி சாட்சி படத்தில் நான் ஹீரோ. அந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு டான்ஸ் சீன். பாலச்சந்தர் டைரக்ஷன். கமல் ஒரு கெஸ்ட் ரோல் செய்வதற்கு வந்திருந்தார். டான்ஸ் சீன் முடிந்ததும் டைரக்டர் பாலச்சந்தர் எனக்கு ‘சைலண்ட் சகலகலா வல்லவர்’ என்றொரு பட்டம் சூட்டினார். அந்தப் பட்டத்தையும் கமல் மூலமா சூட்டினார். சத்தியமாச் சொல்றேன். ‘சைலண்ட் சகல கலா வல்லவர்’ என்ற அந்த பட்டத்துக்குப் பொருத்தமானவர் சூர்யாதான்.
1975 ஜூலை 23ம் தேதி சூர்யா பொறந்தார். முந்தின நாள் மயிலாப்பூர் கல்யாணி ஆஸ்பத்திரியில் அவங்கம்மாவை அட்மிட் பண்ணினோம். “நீங்க ஒண்ணும் பயப்பட வேணாம் சார். அந்தம்மா ஜாலியா ஆனந்தவிகடன், குமுதம்னு புஸ்தகம் படிச்சிட்டிருக்காங்க. நாளைக்குக் கூட பிரசவம் சந்தேகம்தான். நீங்க வீட்டுக்குப் போய் நிம்மதியாத் தூங்குங்கன்னு நர்ஸ் சொன்னாங்க.
ஓயாத படப்பிடிப்பு. அதனால் ஓய்ஞ்சுபோய்ப் படுத்ததுதான் தெரியும். ராத்திரி 12,30 மணிக்கு டெலிபோன் அலறுச்சு. பயந்துபோய்ப் போனை எடுத்தா “சார் உங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்திருக்கு”ன்னு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல். வெளியில் மழையோ மழை. மழை கொட்டுது. உடம்பு சிலிர்த்திடுச்சி.
நடு ராத்திரியில் நானே காரை எடுத்து ஓட்டிக்கிட்டுப் போனேன்.
பிரம்புத் தொட்டிலின் துவாரத்துக்குள்ளே பிஞ்சு விரலை நுழைச்சிகிட்டு என் வாரிசு மலங்க மலங்க முழிச்சிகிட்டிருந்தது.
சந்தோஷம் தாங்க முடியலை. அங்கே இருந்த எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்தேன்.
விடியட்டும்னு காத்திருந்து சிவாஜி, எம்ஜிஆர், சின்னப்பா தேவர் வீடுகளுக்குப் போய் சாக்லெட் கொடுத்து சேதி சொன்னேன்.
அப்புறம் வளர்ந்தப்புறம் சூர்யா ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வெண்ட், பத்மா சேஷாத்திரி, செயிண்ட் பீட்ஸ் ஸ்கூல், லயோலா காலேஜ் எல்லாம் போய்ப் படிச்சாரு.
ஒரு விஷயம் சொல்றேன். என் நினைவு தெரிஞ்சு அந்த இருபது வருஷத்தில எங்கிட்ட முழுசா நாலு வார்த்தை என் முகத்தைப் பார்த்து சூர்யா பேசினதா ஞாபகமில்லை. திடீர்னு ஒரு நாள் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வந்தார். ரெண்டு பசங்க ஜாதகத்தையும் பார்த்தார். “ஐயா இவரு சினிமாவுல் பெரிசா வருவாரு” அப்படின்னார்.
“யாரு சின்னவரா?”
“இல்லீங்க…. பெரிய தம்பி”
“ஏங்க அவரு ஒரு அப்புராணி. வாயே திறக்க மாட்டாரு. அவரைப் போய் நடிகராவார்ங்கறீங்களே”
“அப்படி இல்லீங்க. அதுக்கான ஸ்டார் வரும்போது எல்லாம் தானா வந்துரும். ஊமையா இருந்தவன் மகா கவி காளிதாஸ் ஆகலீங்களா? உங்களை விட நல்ல நடிகர்னு பேர் வாங்குவாரு. அதிகம் அவார்டு எல்லாம் வாங்குவாரு. உங்களை விட அதிகம் சம்பாதிப்பாரு. இன்னொரு விஷயம். இவருக்கு லவ் மேரேஜ்தான்” அப்படின்னாரு.
எதையுமே நான் நம்பலை. ஆனா அவரு சொன்ன அத்தனையும் நடந்தது. BNT கம்பெனியில் வேலைப் பார்த்தாரு.
எப்படியும் கடுமையா உழைச்சு பொழைச்ணுக்குவார்னுதான் நினைச்சோம். ஆனா இந்த வளர்ச்சியை நாங்க கனவிலும் எதிர்பார்க்கவில்லை. இறைவனுக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் நன்றி.” இவ்வாறு சிவகுமார் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
இதுபற்றிக் குறிப்பிட்ட சூர்யா “அப்பா இவ்வளவு உணர்ச்சிகரமாகப் பேசி நான் பார்த்ததில்லை. இது எனக்குக் கிடைத்த வரம் அப்படின்னுதான் சொல்லணும்” என்றார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.