திமுகவினரை 89 வயக்காட்டு பொம்மைகள் என்று அதிமுகவினர் கூறுவார்கள் என்றால் அதிமுகவினரை 131 கொத்தடிமைகள் என்று பேசுவதில் என்ன தவறு?- கேட்கிறார் ஸ்டாலின்.
’89 வயக்காட்டு பொம்மைகள்’ என அதிமுகவினர் சட்டசபையில் பேசுவது சரியென்றால் ’131 கொத்தடிமைகள்’, ’131 சோற்றால் அடித்த பிண்டங்கள்’ என்று பதில் தருவதில் என்ன தவறு ?” . ”சட்டசபையை முறைப்படி நடத்த வேண்டிய சபாநாயகரே சர்வாதிகார மனப்பான்மையுடன் அவை முடங்குவதற்கு காரணமாக இருக்கிறார்” என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் திமுகவினரை தரக்குறைவாக விமர்சித்து பேசிய அதிமுக உறுப்பினரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், திமுகவினரின் கோரிக்கைகளை புறக்கணித்த சபாநாயகருக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இன்று மின்துறை சம்பந்தமான மானியக் கோரிக்கை விவாதத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எங்களுடைய உறுப்பினர்கள் திரு.ரெங்கநாதன் மற்றும் திரு.எ.வ.வேலு ஆகியோர் உரையாற்றினார்கள். தொடர்ந்து நாங்கள் விவாதத்தில் பங்கு பெற வேண்டும், அந்தத் துறையினுடைய அமைச்சர் சொல்லக் கூடிய பதிலையும் பொறுமையாக இருந்து கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் அவையில் பங்கேற்றோம். ஏற்கனவே சபாநாயகருடைய ஒரு தீர்ப்பை கண்டிக்கும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்திருந்தாலும் தொடர்ந்து மீண்டும் நாங்கள் அவைக்குள் சென்று சபை நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.
அப்படிப்பட்ட நிலையில் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வேண்டுமென்றே திட்டமிட்டு, 89 வயக்காட்டு பொம்மைகள் என்று அவையில் பேசுகிறார். எங்களை மையப்படுத்தி, எங்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நிலையில் அவர் அப்படி பேசியபோது நாங்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தோம்.
அப்போது அவையில் மாண்புமிகு முதலமைச்சர் இருந்தார். அவர் உடனே எழுந்து, ”அது ஒன்றும்”அன்பார்லிமெண்ட் வார்த்தை” அல்ல, அவைக் குறிப்பிலிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை”, என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
ஆனால் நாங்கள் கடைசி வரையில் அதை அவைக் குறிப்பிலே இருந்து நீக்க வேண்டும் என்று மன்றாடினோம்,சபாநாயகரிடத்தில் உரிமையோடு கேட்டோம். ஆனால், ”அதை பதிவு செய்து விட்டேன், எனவே நீக்கமுடியாது”,என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
அதன்பிறகு, எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று அவரிடம் வாதாடி, போராடிய பிறகு எனக்கு அனுமதி கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் பேசியபோது, ”89 வயக்காட்டு பொம்மைகள் என்று ஒரு அதிமுக உறுப்பினர் பேசுவது அவைக் குறிப்பிலே இருக்கலாம் எனச் சொல்கிறீர்கள், எனவே 131 கொத்தடிமைகள், 131சோற்றால் அடித்த பிண்டங்கள்”, என்று குறிப்பிட்டு அது அவையின் பதிவில் இருக்க வேண்டும் எனச் சொன்னபோது, அவர்கள் உடனே அவைக் குறிப்பிலே இருந்து நீக்குகிறார்கள். இது என்ன நியாயம் ?
நீக்கினால் அதிமுக உறுப்பினர் பேசியதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நான் பேசியதையும் நீக்க வேண்டும். ஆனால் அது அவைக் குறிப்பிலே இருக்கிறபோது நான் பேசியதில் என்ன தவறு ? அதை ஏன் நீக்க வேண்டும் ?
நான் யாரையும் பெயரைச் சொல்லி விமர்சனம் செய்து பேசவில்லை. அவர்களும் அப்படி பேசவில்லை என்று சொல்லி தான் சபாநாயகர் தீர்ப்பு தந்தார். எனவே அந்த தீர்ப்பு தானே இதற்கும் பொருந்தும் ?
நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். ஆக அந்த சுயமரியாதையை காப்பற்றிக் கொள்ள நாங்கள் கடைசி வரை போராடினோம். ஆனால், கடைசிவரையில் சபாநாயகர் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடவில்லை. கடைசியில் அவர் வேறு வழியில்லாமல் சபையை ஒத்தி வைத்து விட்டு போயிருக்கிறார் என்பது உள்ளபடியே வேதனைக்குரியது.
அமைச்சர் அவர்கள் நியாயமாக பதில் சொல்லியிருக்க வேண்டும். சபாநாயகர் முறையாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு சுமூகமாக ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனவே ஒரு சர்வாதிகார மனப்பான்மையோடு, முதலமைச்சர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படக்கூடிய ஒரு சபாநாயகராக,சர்வாதிகாரம் பிடித்திருக்கக் கூடிய சபாநாயகராக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
கேள்வி: தினமும் அவை பலமணி நேரம் முடக்கப்படுகிறதே ?
பதில்: அதற்கு முழுக்க முழுக்க சபாநாயகர்தான் காரணம். எனவே, அவரிடமே போய் இந்த கேள்வியை கேளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-மகேந்திரன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.